×

திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர்வு கூட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள்

*கலெக்டர் வழங்கினார்

*மனுக்களுக்கு 15 நாட்களில் தீர்வு காண உத்தரவு

திருவண்ணாமலை : திருவண்ணாலையில் நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில், மாறறுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்களை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார்.
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நேற்று நடந்தது. அதில், ஆர்டிஓ மந்தாகினி, மகளிர் திட்ட அலுவலர் சரண்யாதேவி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் தீபசித்ரா, சமூக நல அலுவலர் மீனாம்பிகை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், கூட்டத்தில் மனு அளிக்க வரும் பொதுமக்கள், மனுக்களை முழு விபரங்களுடன் எழுதி கொடுப்பதற்காக அலுவலர்களை கலெக்டர் நியமித்துள்ளார். அதேபோல், மனு அளிக்க வரும் பொதுமக்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்றிருப்பதை தவிர்க்க, இருக்கை வசதிகளையும் ஏற்பாடு செய்துள்ளார்.

அதையொட்டி, கட்டணமின்றி மனுக்கள் எழுதித்தரும் பணிகளையும், இருக்கை வசதிகள் முறையாக செய்யப்பட்டுள்ளதா என்பதையும் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேரில் சென்று பார்வையிட்டார்.அதைத்தொடர்ந்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். அதோடு, மனுதாரர் முன்னிலையில் சம்மந்தப்பட்ட துறை அலுவலரை நேரில் அழைத்து, மனுமீதான நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார்.

மேலும், மனுவை முறையாக ஆய்வு செய்து, 15 நாட்களுக்குள் உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும் என உத்தரவிட்டார்.மேலும், மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான செயற்கை கால்கள், ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ.9,600 மதிப்பிலான சிறப்பு சக்கர நாற்காலி ஆகியவற்றை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார்.

நேற்று நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில், அரசு நலத்திட்டங்கள், வங்கிக்கடனுதவி, பட்டா மாற்றம், இலவச வீட்டுமனைப்பட்டா, உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்ததி 605 பேர் மனு அளித்தனர். குறைதீர்வு கூட்டத்தில், கலெக்டர் நேரடியாக மனுவை பெற்று விசாரிப்பதால், கடந்த இரண்டு வாரங்களாக பொதுமக்களின் வருகை அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், போளூர் அடுத்த வெண்மணி கிராமத்தில் ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் 83 குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனைகளை சிலர் ஆக்கிரமிக்க முயற்சிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் மனு அளித்தனர்.அதேபோல், வந்தவாசி அடுத்த சத்தியவாடி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், குடியிருக்க வசதியின்றி தவிக்கும் 50க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனர்.

The post திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர்வு கூட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai ,Bhaskara Pandian ,Collector ,
× RELATED ‘என் கல்லூரி கனவு’ உயர்கல்விக்கான...